Thursday, May 26, 2011

கொடுங்கோலன் பிணத்திற்குச் சமமானவன் / நீதிநெறி விளக்கப் பாடல்

முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா . இடித்து இடித்துக்
கட்டுரை கூறின் செவிகொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்

மேற்கண்ட பாடல் கொடுங்கோலன் குறித்து நீதிநெறி விளக்கத்திலே கூறப்பட்ட அருமையான பாடலாகும்.  கொடுங்கோலன் எப்படி இருப்பான்.
அருமையான மலர்களை அணிந்து - வாசனைத் திரவியங்களைப் பூசி - சிற்ந்த ஆடைகளை அணிந்து கொள்வான்.  அறுசுவை உணவை உண்பான்.  இதுவரைக்கும் இவனைப் பாராட்டலாம்.  வாழ்க்கையை அனுபவிக்கிறான் இந்த அரசன் என்று கருதலாம்.  ஆனால்  தவறுகள் செய்யும் போது அமைச்சர்க்ள் இடித்துக் கூறினால் - சுட்டிக்காட்டினால் - அப்படிப்பட்ட அறிவுரைகளை செவிகொடுத்துக் கேட்க மாட்டான்.    தான் ஆசைப்பட்ட வண்ணம் நடந்து கொள்வான்.  இப்படிப்பட்ட மன்னனை யாருடன் ஒப்பிடலாம்.  புலவர் ஒரு பிணத்திற்குச் சமமானவன் இந்த அரசன் என்று கூறுகிறார்.

கட்டுரை என்றால் அறிவுரை
நெட்டுயிர்ப்பு என்றால் பெருமமூச்சு என்று பொருள்.

ulaga neethi padalgal# உலக நீதி


உலக நாதர் என்பவர் தமிழ் மொழியில் உலக நீதி என்னும் அருமையான நூலை இயற்றி பல சிறந்த கருத்துக்களை மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி அருமையாகக் கூறி உள்ளார்.  கருத்துக்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தவை தான்.  நாம் அதன்படி நடக்கிறோமா என்பதை மட்டும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
சிறந்த நூல்களை கற்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
தீங்கு பயக்கும் சொற்களை யாரிடமும் பயன்படுத்த வேண்டாம்
ஈன்றெடுத்த அன்னையை என்றும் மறக்க வேண்டாம்
வஞ்சகர்களோடு என்றும் சேரக் கூடாது
தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டாம்
ஒருவரை நேரில் புகழ்ந்து பேசி பின்னர் குறை சொல்ல வேண்டாம்
நல்ல சிந்தனைகள் தானே.  நாமும் பின்பற்றலாமே.