Thursday, September 30, 2010

http://valavu.blogspot.com - fine tamil blog - regarding


இன்று நான் வளவு எனறு ஒரு வலைத் தளத்தில் பொழுது பூராவும் சுற்றினேன்.  மிக அருமையான பதிவுகள்.  சவுக்கடி தரும் சாட்டை போல கட்டுரைகள்.  கலங்கரை விளக்கம் போல தமிழ்க் கடல் எங்கும் ஒலி பாய்ச்சியது.  பல தகவல்கள்.  சொல் ஆராய்ச்சி - எண் ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி - வானியல் ஆராய்ச்சி.  அப்பப்பா பன்முகம் கொண்ட வலைத் தளம்.  மொழியின் பால் அக்கறை கொண்டுள்ள அருமையான தளம்.  பல சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை அறிந்து கொண்டேன்.  தமிழே தெரியாமல் பிற மொழி சொற்களை பயன் படுத்தியதற்கு வெட்கப்பட்டேன்.   வேதனைப்பட்டேன்.  "கனி இருப்பக் காய்" தேர்வு செய்தது போல நாட்களை வீண் அடித்து உள்ளேன்.  அவர் கேட்கும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.  பதில் சொல்லுங்கள்.  உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் தமிழே சிந்தித்து உள்ளார்.  தமிழோடு ஒப்பிட்டு உள்ளார்.  தமிழ் தான் எல்லாம் எனறு சாதிக்க அவரால் முடிகிறது.  தமிழன் எனறு சொல்லடா தாளை நிமிர்ந்து நில்லடா என்பது அவரது தாரக மந்திரமாக உள்ளது.  அதே சமயம் பிற மொழிகளை வெறுக்கவும் இல்லை.  அதனால் தான் ஆணித்தரமாக கருத்துகளை ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார்.  நாமும் படித்து ஒரு சிறு பங்காவது அவர் போல வர வேண்டும்.
உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீர்களா?

நீங்கள் பேசும் ஆங்கிலத்திற்குள் உங்களை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால் அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, அதைத் தவிர்க்க முயன்றிருக்கிறீர்களா? உங்கள் ஆங்கில வன்மை கூடுவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலியை வைத்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும் போது அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீர்களா?

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?

எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும் 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உங்களுக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்

மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ?

தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.., கொஞ்சம் திரு.வி.. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா..ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா?

ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?

அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?
இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால். செய்வீர்களா?

தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

அடுத்துள்ள புதுச்சேரி மாநிலம் தங்கள் மாநிலத்தில் எந்தப் பள்ளியில் படித்தாலும் அவர்கள் தமிழர்களாக இருப்பின்/ குறிப்பிட்ட காலம் தமிழ் பேசும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாக இருப்பின், தமிழ்மொழிப் பாடத்தை எட்டாவது வரை கட்டாயமாகப் படித்தே தீரவேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.
அவர்கள் துணிவுள்ளவர்கள்; பாராட்டத்தான் வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அது இறகு போடாது என்பது தமிழ்ப் பழமொழி. மக்களாட்சி என்பது பொறுப்பற்ற, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆட்சி அல்ல. அரசின் ஆட்சி என்பது ஒருவகையில் அதிரடிச் செயல் தான்.

தொலைக்காட்சியில் வரும் ஓடைகளை மாற்றிக் கொண்டு இருந்தேன். கையில் தூரக்கட்டு இருந்தால் ஓர் ஓடையில் நிலைக்காமல் இப்படி மாற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும்;

ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.
ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.
நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?

தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.
தமிழில் இருந்து கிரந்தம் பிறந்ததனால் கிரந்த எழுத்தைத் தமிழ் எழுதப் பயன் படுத்துங்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறோம். இது தவறா? அப்படி எழுதப் புகுந்து தான் மலையாளம் பிறந்தது. மலையாள எழுத்திற்கும், கிரந்த எழுத்திற்கும் மிக மிகக் குறுகிய வேறுபாடே உண்டு. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து நிலைத்துப் போனதற்கு கிரந்த எழுத்தில் நம்பூதிரிகள் எழுதத் தொடங்கியதே பெருங் காரணம்

இதே போல ஆங்கிலம் கலந்த சொல்லை பயன்படுத்தி தமிழைக் கொள்ளக் கூடாது என்றும் பதிவு செய்து உள்ளார்.  ஒரு விளம்பரத்தை அவர் உதாரணமாகக் காட்டி உள்ளார்.  ஒரு வார இதழில் வந்தது.
அண்மையில் (11/11/09) அன்று வெளியான அறிவிப்பு.

"
ஹாய் வாசகர்களே! 64-65ம் பக்கங்களில் "ஜோக் ஆர்மி" ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் AVJ என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப் பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்டுடன் வந்து விழும் 10 எஸ்எம்எஸ் களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 8.1.109அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்எம்எஸ்கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போ 64-65ம் பக்கங்களில் ஜோக் ஆர்மிக்கு ணிவகுப்போமா? ஜோக்குகளில் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது! எஸ்எம்எஸ் கட்டணங்களுக்கு உட்பட்டது! கடந்த வார ஜோக் பார்க் போட்டி முடிவுகள் 11ம் பக்கத்தில்! ஆல் நியூ விகடனைப் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004 எதிர்முனையில் பதில் குரலை எதிர்பாராமல் தாங்கள் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்து விடுங்கள்!
இப்படி வருவதை நாம் கண்டிப்பதில்லையே?  அதனால் தான் நம் மொழியைக் கொலை செய்கிறார்கள் பாதகர்கள்.  தாயைத் தண்டிப்பதில் என்ன சுகமோ இவர்களுக்கு?  இவர்கள் பித்ரு பூஜை என்னும் முன்னோர் பூஜை செய்தும் பயன் இல்லை.  பாழ் நரகம் தான் இப்படிப்பட்டவர்களுக்கு.

No comments:

Post a Comment